வவுனியா பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் மூன்று மாதங்களிற்கு முன்னர் அகால மரணமடைந்திருந்த நிலையில் மரண விசாரணைகளின் பின்னர் அவரது சடலம் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதியில் அண்மையில் மற்றுமொரு உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு அதே மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்தபகுதியிலிருந்து துர்நாற்றம் வந்ததையடுத்து பொதுமக்கள் சென்று அந்த பகுதியை பார்வையிட்ட பின்னரே விடயம் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, சடலம் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அதில் இருந்து உயிரிழந்தவரின் தலையை இனம் தெரியாத நபர்கள் அகற்றிச்சென்றுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவிப்பதுடன் வவுனியா காவல் நிலையத்திற்கு முறைப்பாடும் பதிவுசெய்துள்ளனர்.
இந்தசம்பவம் தொடர்பாக வவுனியா குற்றப்பிரிவு காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
