கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய கூலித் தொழிலாளி ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, காவல்துறை காவலில் தான் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்து குறித்த இளைஞர், அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, மனுதாரரின் அடிப்படை உரிமைகள் காவல்துறையினரால் மீறப்பட்டுள்ளதாக மன்றில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்போது, தனிநபர்களின் வறுமை அல்லது சமூகப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, சட்டம் நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அவர்களைப் பாரபட்சமாக நடத்த அரசியலமைப்பு இடமளிக்காது என நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இழப்பீட்டுத் தொகையான 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் வழங்கக் கூடாது எனவும், குற்றம் இழைத்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் தலா 75 ஆயிரம் ரூபா வீதம் தமது சொந்தப் பணத்திலிருந்து ஆறு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
.jpeg)