அர்ச்சுனாக்கு வந்த நிலை

 


யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அவர்களால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு, நேற்றைய தினம் (27) பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பணிப்பாளர் கேதீஸ்வரன் சாட்சியமளித்தார்.

கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா பணியாற்றிய போது, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதைப்பொருட்களாக மருந்தகங்கள் ஊடாகப் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். இந்தக் கூற்றுத் தொடர்பாகவே இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் ஆரம்ப விசாரணைகளின் போது, குறித்த காணொளி தன்னாலேயே பதிவேற்றம் செய்யப்பட்டதையும், அந்தத் தகவல் தன்னாலேயே கூறப்பட்டதையும் அர்ச்சுனா ஏற்றுக்கொண்டிருந்தார். மேலும், அக்குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நீதிமன்றில் நிரூபிப்பதாகத் தமது தரப்பு நியாயத்திலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த வைத்தியர் கேதீஸ்வரன், தமது பணிக்காலத்தில் வலி நிவாரணிகள் மருத்துவச் சீட்டு இன்றி வழங்கப்படுவது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்தும், அது தொடர்பில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.