வைத்திய கல்லூரி மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்


 ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதியுடன் தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 மருத்துவப் பட்டதாரிகளுக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமானது எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட இறுதித் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் தொடர்பாக, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு எவ்விதப் பொறுப்பையும் ஏற்காது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.