நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மலையகத் தமிழ் மக்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் பேசி வருவதாக மலையக சிவில் பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கிளிநொச்சியில் வாழும் மலையக மக்களை மிருகங்களுடன் ஒப்பிட்டும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும் அவர் இழிவுபடுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சியில் வாழும் மலையக மக்களை மிருகங்களுடன் ஒப்பிட்டும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும் அவர் இழிவுபடுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் தனது அரசியல் வளர்ச்சிக்காகவும், சொந்த யூடியூப் தளத்தின் பிரபலத்திற்காகவும் இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருவதாகச் சிவில் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளைப் பேசுவது பாரிய குற்றமாகும். எனவே, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை தலைமையகத்திலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் (CID) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி இவ்வாறான வெறுப்புப் பேச்சுகள் தொடர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மலையக சமூகத்திற்காகக் குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
